Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி மரணம்: தொலைபேசியில் ஸ்டாலின் ஆறுதல் 

ஆகஸ்டு 28, 2020 07:48

சென்னை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி. இவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் உயிர் பிரிந்தது.

கலைச்செல்வியின் உடல் சொந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகிலுள்ள ஓரடியம்புலத்துக்கு இறுதிச் சடங்குக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்துத் தகவலறிந்த திமுக தலைவர் ஸ்டாலின், தொலைபேசியில் ஓ.எஸ்.மணியனைத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்ட முகநூல் பதிவு :

''அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி திடீரென உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தேன். அன்புக்குரிய தமது மனைவியை இழந்து வாடும் அமைச்சருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்